நலமில்லா நவீனமும்.. உழைப்பில்லா உடல்களும்


(*) மின்னிலே சுழன்றிடும்
மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..

(*) அறவை மில்களின்
ஆற்றலின் உதவியால்
உரலும் உலக்கையும்
உதவாக் கரைகளாம்..

(*) ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..

(*) குடங்கள் சுமந்து
கொண்டு வந்திட்டார்
குடிநீர் ஒருகாலம்!!
குழாய்கள் இப்போது.

(*) அறிவீர் ஓருண்மை..
ஆதியில் சொன்ன
கருவிகள் மாறின
கடைசியில் பலனென்ன?

(*) மறைந்த அம்மியில்
கரங்களின் வலிமையும்
உரலின் மறைவினில்
உரமான தேகமும்

(*) குடைகல்லின் மறைதலில்
விரல்களின் வீரியம்
குடங்களின் மறைதலில்
கொடியிடை மேனியும்

(*) கூடவே மறைந்ததை
குறையல்ல! வரமென்றோம்
மாடர்ன் உலகுக்கு
மாறுதல் பலமென்றோம்..

(*) அறிவியல் வளர்ச்சியில்
யாவுமே நடந்திடும்
துரிதமாய்..அங்ஙணம்
மரணமும் வரின்?

(*) குறைவாய் உழைப்பும்
கூடுதல் உணவும்
நிறைவாய் சேர்க்கும்
நீள்பிணி நம்மில்..

(*) உண்ணுதலொத்த உடலுழைப்பும்
உழைப்பிற்கேற்ற உணவுகளுமே
முன்னவர் சொல்லிய
முறை ஆகும்..

(*) விகிதம் மாறா
விதம், உடல்பேணிடும்
சகிதம்வாழ, நம் அகவை
சதமென்றாதல் சாத்தியமே
---அதிரை என்.ஷஃபாத் 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிக அருமையான ஆழமிக்க கவிதைகள்! தோழரின் கவி ஒலியும் கேட்டேன், தங்கள் குரலும், கவி மொழிந்த விதமும் அருமை ! பாராட்டுக்கள்.

சிவக்குமார் சொன்னது…

கவிதை கருத்துப்பொதிவுடன் அருமை. தலைப்பும் நச்